ராசிபுரம் கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் முதலாவது பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை ராசிபுரம் உழவர் சந்தையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேளாண்மை துறை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ப.சிதம்பரம் தலைமை வகித்தார். நடேசன் வரவேற்றார். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து நிறுவனத்தின் இயக்குநர் துரைசாமி விளக்கவுரை ஆற்றினார்.
தலைமை வகித்த வேளாண்மை துணை இயக்குநர் ப.சிதம்பரம் பேசியதாவது: தமிழக அரசு விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கூட்டு பண்ணைய திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 20 பேர் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்களை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் 5 உழவர் ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்த 100 விவசாயிகளை ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவக்கப்பட்டு வருகிறது. இதன்படி 10 உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு ராசிபுரம் கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில், இடைதரகர்கள் இன்றி பொருளை விற்பனை செய்திடவும், அதே போல் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்திடவும் இந்த நிறுவனம் துணை புரியும் என்றார்.
மேலும் இந்த நிறுவனத்தை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டார். இதில் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி மையம்) அசோகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இன்றைய காலத்தின் கட்டாயம் விவசாயிகள் ஒன்றிணைந்து தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களை தரம் பிரித்து, மதிப்பு கூட்டி விற்பனை செய்யும்போது அதன் முழு லாபமும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் நிலை உருவாகி வருகிறது. எனவே, இந்த நிறுவனம் விவசாயிகளின் தரத்தை மேம்படுத்துவதில் உறுதுணையாக விளங்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார். ராசிபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால், வல்வில் சுதேசி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் தியாகராஜன், நிறுவன இயக்குநர் பெரியசாமி ஆகியோர் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை உதவி அலுவலர்கள், பங்குதாரர்கள், விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.