வாக்குக்கு பணம் பெறுவதை வாக்காளர்கள் நிறுத்தினால் மட்டுமே உரிமைகளைக் கேட்டுப் பெற முடியும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.
குமாரபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் கொடியேற்று விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்று, அவர் பேசியது:-
தமிழகத்தில் வாக்குக்கு பணம் பெறுவதை வாக்காளர்கள் நிறுத்தினால் மட்டுமே, உரிமைகளைக் கேட்டுப் பெற முடியும்.
வேட்பாளர்கள் தங்களின் சொந்தப் பணத்தைத் தர விரும்பமாட்டார்கள். முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொடுத்து, மீண்டும் அதைவிட இருமடங்கு சம்பாதிக்கவே விரும்புவர். குமாரபாளையத்தில் விசைத்தறித் தொழிலையும், சாயத் தொழிலையும் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் காவிரி ஆற்றையும் பாதுகாக்க பொது சுத்திகரிப்பு நிலையத்தை விரைந்து அமைப்பதும் கட்டாயத் தேவை என்றார்.
கூட்டத்துக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.காமராஜ் தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் அறிவொளி எஸ்.சரவணன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் எம்.சரவணன், மாவட்ட இணைச் செயலர் ஆர்.செங்கோட்டுவேல் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா ராஜ்குமார், ஆர்.தங்கவேலு, நிர்வாகிகள் கே.சிபு, மா.உதயகுமார், எம்.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.