அரசுப்பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மழை காலம் தொடங்கவுள்ள நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கையெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் அமைந்துள்ள பகுதிக்கும் எதிரில் உள்ள காலி இடம் பள்ளமாக இருப்பதால், மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்குள் செல்ல மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பள்ளி சமையல் அறை கட்டடம் வரை தண்ணீர் தேங்கி விடுவதால், மதிய உணவு தயார் செய்யவும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. வடகிழக்குப் பருவ மழை காலம் தொடங்க உள்ள நிலையில் இங்கு தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளதால், உடனடியாக தண்ணீர் வெளியேற வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், நிரந்தர தீர்வாக பள்ளியில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தை சமன் செய்து பள்ளிக் கட்டடம் உள்ள அளவுக்கு உயர்த்தி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.