இன்று மதுரைக்கு புறப்பாடாகிறார் கள்ளழகர்: நாளை எதிர்சேவை

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர் மலையிலிருந்து மதுரை நோக்கி சனிக்கிழமை மாலை கள்ளழகர் புறப்பாடாகிறார்.

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர் மலையிலிருந்து மதுரை நோக்கி சனிக்கிழமை மாலை கள்ளழகர் புறப்பாடாகிறார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று மாவடியில் மக்கள் வரவேற்பளிக்கும் எதிர்சேவை நடைபெறுகிறது.
   மதுரை சித்திரைத் திருவிழா மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்மலை கள்ளழகர் கோயிலை இணைத்து நடத்தப்பட்டுவருகிறது. அழகர்மலையில் உள்ள கள்ளழகர் கோயில் விழாவானது கடந்த 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியோடு  தொடங்கியது.
 மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற நிலையில், மாலையில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். அவர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கண்ணனேந்தல் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் மூன்றுமாவடி வந்தடைகிறார். அங்கு  எதிர்சேவை நடைபெறுகிறது. 
   மூன்றுமாவடியில் இருந்து புறப்பாடாகும் கள்ளழகர் சர்வேயர் காலனி, புதூர், டி.ஆர்.ஓ.காலனி, புதுநத்தம் சாலை, ரிசர்வ்லைன் ஆயுதப்படை மாரியம்மன் கோயில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அலுவலகம் உள்ளிட்ட மண்டகப்படிகள் வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை மாநகராட்சி பிரதான அலுவலகப் பகுதி மண்டபகப்படிகளில் எழுந்தருள்கிறார். அழகர்கோவில் முதல் மதுரை வரை சுமார் 453 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.  
  மதுரை வரும் கள்ளழகருக்கு மாநகராட்சி பிரதான அலுவலகப் பகுதியிலும் (அவுட்போஸ்ட்)  பக்தர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின் ஒவ்வொரு மண்டகப்படியாக எழுந்தருளும் கள்ளழகர் ஞாயிற்றுக்கிழமை இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் அருள்பாலிப்பார்.
 திங்கள்கிழமை அதிகாலை பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் தல்லாகுளம், கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருள்கிறார். பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படிக்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.  பின்னர் அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர்வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருள்கிறார்.  
 செவ்வாய்க்கிழமை (மே 1)  காலை சேஷ வாகனத்தில் வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் பூஜைகள் நடைபெறும். 
 தேனூர் மண்டபத்திலிருந்து புறப்பாடாகும் கள்ளழகர் செவ்வாய்க்கிழமை இரவு ராமராயர்மண்டபத்தில் எழுந்தருளியதும் விடிய விடிய தசாவதாரம் நடைபெறுகிறது. புதன்கிழமை (மே 2) ராமராயர் மண்டபத்தில் இருந்து மோகன அவதாரத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் வைகை ஆற்றில் மீண்டும் இறங்கி பின்னர் ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் வழியாக தமுக்கம் பகுதியில் உள்ல ராமநாதபுரம் ராஜா  சேதுபதி மண்டபத்தில் எழுந்தருள்வார். அன்றிரவு அங்கு பூப்பல்லக்கில் எழுந்தருளுயதும்,  வியாழக்கிழமை (மே 3) அதிகாலை மலைக்குப் புறப்பாடாகிறார். அன்று இரவில் அப்பன்திருப்பதில் தங்கி அருள்பாலிக்கிறார்.  வெள்ளிக்கிழமை (மே 4) அழகர்கோவிலை அடைகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com