திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் ரூ.42 லட்சம் செலவில் 30 டன் குளிர்சாதன வசதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் கருவறையில் கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக் கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னதி அமைந்துள்ளது.
குடவரைக் கோயிலான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
குடவரை கோயிலாதலால் மலை மீதுள்ள வெப்பம் அப்படியே சன்னதிக்குள் இறங்குகிறது. இதனால் கோயிலுக்குள் அதிகளவில் வெப்பம் இருக்கும். இதனால் கோயில் கருவறையில் சில ஆண்டுகளுக்கு முன் கருவறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.
சில மாதங்களிலேயே அது பழுதானது. இதையடுத்து தற்போது கோயில் நிர்வாகத்தின் முயற்சியால் உபயதாரர் மூலம் ரூ.42 லட்சம் செலவில் 30 டன் அளவிலான நவீன வகை குளிர்சாதனங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி இன்னும் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.