ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மே 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்க தென் மண்டல அமைப்பாளர் ஆசிரியத் தேவன் கூறியது:
தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் ஆகியன நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக ஓய்வூதியக் கமிட்டி அமைத்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. தற்போது பணியில் இருக்கும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை (ஏப்.24) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் மே 22 முதல் அனைத்துப் பணியாளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.