நூலகங்களில் புத்தகம் வாசிப்போர் அதிகரித்தால் சமுதாயத்தில் குற்றங்கள் குறைந்துவிடும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறினார்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு சிம்மக்கல்லில் உள்ள மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் ஏற்பாடு செய்திருந்த புத்தக கண்காட்சியை சனிக்கிழமை அவர் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: மதுரை மாவட்ட மைய நூலகம் தென் மாவட்ட அளவில் பெரியதாகவும், 2.25 லட்சம் புத்தகங்களை உடையதாகவும் இருப்பது பெருமைக்குரியது. ஆனால், அதை மக்கள் சரியாகப் பயன்படுத்த முன்வரவேண்டும். குழந்தைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவது அவசியம். விளையாட்டு, புத்தக வாசிப்பில் கவனம் செலுத்தும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக விளங்குவர். பசுமரத்தாணி போல குழந்தைகள் மனதில் புத்தக வாசிப்பை ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் அவர்கள் மிகச்சிறந்த அறிவு சார்ந்தவர்களாக உருவாகி சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவர்.
நூலகங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரிப்பதால் சமுதாயத்தில் குற்றங்கள் குறையும் என்பதே உண்மை. தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
குழந்தைகளை எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் வகையிலே பெற்றோர் வளர்க்கிறார்கள். ஆனால், பணம் சம்பாதிக்கும் குழந்தைகள் பின்னால் பெற்றோர்களை ஆதரிப்பதில்லை. ஆகவே குழந்தைகள் பண்பாடு, ஒழுக்கம் நிறைந்தவர்களாக வளர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
மாவட்ட மைய நூலகத்தின் அனைத்துப் பகுதியையும் பார்வையிட்ட மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் நூலகத்தை தூய்மையாக வைத்திருக்கவும் ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் சி.காளிதாஸ், மைய நூலக அலுவலர் கே.ரவீந்திரன், இரண்டாம் நிலை நூலகர் டி.ராஜ்குமார், நியூசெஞ்சுரி புக்தக நிலைய மதுரை மேலாளர் ஆர்.மகேந்திரன், எழுத்தாளர்கள் என்.பாண்டுரங்கன், ஜனசிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.