மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர்அதிமுக நகரச் செயலர்(அம்மா அணி) சி.சரவணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் மேலூரில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்துவிட்டோம். இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளான டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே மேலூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜனநாயக நாட்டில் சாதாரண பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி மறுப்பது முறையல்ல எனக்கூறி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கியும், போலீஸார் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.