அரசு வழங்கிய பட்டா நிலத்தில் குடிசை அமைக்க தனி நபர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் இதுதொடர்பான மனுவை ஆட்சியரிடம் அளித்தனர். அதன் விவரம்: மதுரையை அடுத்த சிறுதூர் கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தால் 56 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் சிலர் குடியிருந்து வருகின்றனர். தற்போது குடிசை மாற்று வாரியத்திடம் வீடு கட்டும் திட்டத்தில் பண உதவி பெற்று வீடு கட்ட விண்ணப்பித்துள்ளோம். இந்நிலையில், மேற்கண்ட நிலத்தில் யாரும் குடிசை அமைக்கக் கூடாது என்று தனி நபர்கள் மிரட்டுகின்றனர். எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடு கட்டுவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள்...: வாடிப்பட்டி வட்டம் முடுவார்பட்டியில் உள்ள தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் இருப்பதாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
முடுவார்பட்டியில் 1992-இல் ஏழை மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் அனைத்தும் இப்போது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இவற்றுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.