பாம்புகள் அழிக்கப்பட்டால் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும் என்று அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி பசுமைச் சங்கம் சார்பில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். ஊர்வனம் அமைப்பைச் சேர்ந்த விஷ்வா மற்றும் சகாதேவன் ஆகியோர் பாம்புகளை கையாளும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். அவர்கள் பேசுகையில், உலகில் 300 வகையான பாம்புகள் உள்ளன. அதில் நல்லபாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு வகை பாம்புகள் மட்டுமே அதிக நஞ்சானவை. தவளை, எலியை உண்பதற்காகவே பாம்புகள் விவசாய நிலங்களுக்குள் வருகின்றன. மண்ணுளி பாம்பு, சாரைப்பாம்பு ஆகியவை விவசாயிகளின் நண்பன். காடுகள் அழிக்கப்படுதல் காரணமாக பாம்புகள் நமது இருப்பிடம் தேடி வருகின்றன. பாம்புகள் அழிக்கப்பட்டால் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும்.
பாம்புகள் குறித்து கூறப்படும் கருத்துகள் பெரும்பாலானவை கட்டுக்கதைகளே. பாம்புகள் ஒருபோதும் நம்மை தாக்க நினைப்பதில்லை. தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் மட்டுமே அவை மனிதர்களைத் தீண்டும். விஷமுள்ள பாம்புகள் நம்மைக் கடித்தால் பதற்றமடையக்கூடாது. பதற்றமடைந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக பரவும். பாம்புகள் கடித்தால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். முதல் உதவி அளித்த உடன் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர்.
வனச்சரகர்கள் சரவணக்குமார், ஆறுமுகம், பசுமை சங்கத் தலைவர் ஜெ.இவாஞ்சலின், செயலர் எம்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.