கோவை உலகத் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் வைகைத் தமிழ் கருத்தரங்கம் மதுரை தியாகராஜர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) நடைபெறுகிறது.
இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த சந்திப்புகள், கருத்தரங்கம் நடத்துதல், நூல் வெளியீடு, ஒவ்வோர் ஆணடும் சிறந்த தமிழறிஞர்களுக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழறிஞர் விருது வழங்குதல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு உலகத் தமிழ் பண்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. வட்டார இலக்கியத்தின் வளத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூரைத் தொடர்ந்து நிகழ் ஆண்டில் வரும் வெள்ளிக்கிழமை மதுரையில் வைகைத் தமிழ் என்ற கருத்தரங்கத்தை மதுரை தியாகராஜர் கல்லூரியில், உலகத் தமிழ் பண்பாட்டு மையம் நடத்த உள்ளது. மதுரை மண்சார்ந்த இலக்கியத்தை வளப்படுத்திய 30-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை திறனாய்வாளர்கள் வே.மு.பொதியவெற்பன், திருப்பூர் கிருஷ்ணன், இரா.காமராசு, க.பஞ்சாங்கம், துரை.சீனிச்சாமி, ந.முருகேசபாண்டியன், சொ.சேதுபதி ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டு கருத்தரங்கில் ஆய்வுரையாற்ற உள்ளனர்.
உலகத் தமிழ் பண்பாட்டு மையத் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி விழாவுக்குத் தலைமை வகிக்கிறார். தியாகராஜர் கல்லூரித் தலைவர் கருமுத்து தி.கண்ணன் கருத்தரங்க கட்டுரைகள் அடங்கிய வைகைத் தமிழ் என்ற நூலை வெளியிட்டு தொடக்கவுரையாற்றுகிறார். மதுரை மண்ணின் மரபார்ந்த இலக்கியங்களின் பெருமை குறித்து எழுத்தாளர் வண்ணதாசன் சிறப்புரையாற்றுகிறார். உலகத் தமிழ் பண்பாட்டு மையச் செயலர் சிற்பி பாலசுப்பிரமணியம், தியாகராஜர் கல்லூரி முதல்வர் து.பாண்டியராஜா, எழுத்தாளர் சு.வேணுகோபால், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார் பலர் பேசுகின்றனர்.