மதுரை ஊரகக் காவல்துறையில் கட்செவி அஞ்சல் மூலம் நான்கு மாதங்களில் 116 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை ஊரகக் காவல்துறையில் நேரில் புகார் அளிக்க முடியாத பொதுமக்களுக்காக கட்செவி அஞ்சல் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கட்செவி அஞ்சல் எண் மூலம் 116 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் தெரிவித்த 116 புகார்களில் பெரும்பாலானவை உள்ளூர் சச்சரவு, பெண்களை கேலி செய்வது, தெருக்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பது போன்றவையாகும். மேலும் காவல்துறையினர் மீதே பல புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில் 113 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்செவி அஞ்சலில் புகார் அல்லது தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படுவதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றனர்.
இதுதொடர்பாக கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் கூறும்போது, கட்செவி அஞ்சல் மூலம் வரும் புகார்கள் உள்ளூர் காவல்நிலையங்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. மேலும் புகார் மீதான நடவடிக்கை தொடர்பாக தனிப்பிரிவு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். புகார் மற்றும் அதற்கான தீர்வு ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. நகர்ப் பகுதியில் இருந்து வரும் புகார்கள் தொடர்பாக மாநகரக் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது என்றார்.