மேலூர் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் அலுவலர் தாக்கப்பட்டதாக அப்போதைய மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட 22 பேர் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது மு.க. அழகிரி, அம்பலகாரன்பட்டியிலுள்ள அருள்மிகு வல்லடிகாரர் சுவாமி கோயிலில் முக்கியப் பிரமுகர்களை சந்தித்தார். இந்நிகழ்வுகளை விடியோகிராபர் கண்ணன் பதிவு செய்தார்.
அப்போது, திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்து, தடுத்தனர். இதை, தேர்தல் அலுவலரும் மேலூர் வட்டாட்சியருமான காளிமுத்து தடுத்தார்.
இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தேர்தல் அலுவலர் தாக்கப்பட்டதாக, கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், மு.க. அழகிரி, பி.எம். மன்னன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட் பழனிவேலு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.