பணி வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் வியாழக்கிழமை உடல் உறுப்புகள் தானம் வழங்கும் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
பணி வாய்ப்புகளில் அரசு டாக்டர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், அண்மையில் நடைபெற்ற அரசு மருத்துவர்கள் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் 11-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் வழங்கும் நூதனப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.
இதில் 22-க்கும் மேற்பட்ட பெண் மருத்துவர்கள் உள்பட 50 பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்தனர்.