மதுரையில் வைகையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் வியாழக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஜெயசூர்யா (16). மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு புதன்கிழமை வந்திருந்தார்.
இந்நிலையில், உறவினர் கோபாலகிருஷ்ணனுடன் வைகை ஆற்றுக்கு வியாழக்கிழமை மாலை வந்துள்ளார். தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் ஓடுகிறது.
இந்நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் இருவரும் செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்துள்ளனர். அப்போது இருவரும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். இதில் கோபாலகிருஷ்ணன் நீந்தி கரைக்கு வந்து விட்டார். ஆனால், ஜெயசூர்யா தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
தகவலின்பேரில் தல்லாகுளம் தீயணைப்புப் படையினர் நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு 9 மணி வரை தேடியும் ஜெயசூர்யா சடலம் மீட்கப்படவில்லை. மேலும் இரவானதால் தேடும் பணியை தீயணைப்புப் படையினர் நிறுத்தினர். மேலும் வைகையாற்றின் இரு கரைகளிலும் போலீஸார் தேடி வருகின்றனர்.