மணல் குவாரி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு-உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாநில அரசு மேல்முறையீடு செய்த

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாநில அரசு மேல்முறையீடு செய்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
  மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி கோரி புதுக்கோட்டை மாவட்டம் எம்ஆர்எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்ஆர்எம் ராமையா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி அரங்க. மகாதேவன், இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு,  தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட உத்தரவிட்டார்.
 இந்நிலையில்,  தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநெல்வேலி, கன்னியாகுமரி,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசின் கனிமவளச் சட்டப்படி மனுதாரர் இறக்குமதி செய்துள்ள மணல் தொழிலக பயன்பாட்டிற்கான மணல்(தாது மணல்) என்ற வரையறைக்குள் வருவதால்தான் மணலை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
    எம்ஆர்எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 45 மெட்ரிக் டன் மணலை வாங்கிய பாளையங்கோட்டையைச் சேர்ந்த மரிய ஆண்டனியும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்தார்.  இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
 இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் வாதிடுகையில்,  தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை ஆன்-லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் மணல் கடத்தல் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத மணல் கடத்தலைக் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலாக இருந்தாலும் அவை மாநில விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றார்.  
 இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இறக்குமதி செய்த மணலை ஏற்றிச்சென்ற லாரிகளை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஏற்றிச் சென்ற லாரிகளை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எஸ். சுஜா உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 எம்ஆர்எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை அவரது வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுப்பதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மார்த்தாண்டம் எடுத்துச் செல்ல எங்களது லாரிகளை வாடகைக்கு எடுத்திருந்தார். 
 ஆனால்,  வெளிநாட்டு மணலை எடுத்துச் செல்ல முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி எங்கள் லாரிகளை ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் அக்டோபர் 22-ஆம் தேதி பறிமுதல் செய்தார். தமிழ்நாடு கனிமவளச் சட்டப்படி எங்களது லாரிகளை பறிமுதல் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை.  
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு மனு செய்தும் நடவடிக்கை இல்லை.  எனவே எங்களது லாரிகளை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
  இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி அரங்க. மகாதேவன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.  மனுவை விசாரித்த நீதிபதி, லாரிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார். 
 மேலும், லாரியில் இருக்கும் மணலை அதிகாரிகள் கூறும் இடத்தில் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வைப்புத் தொகையை லாரி உரிமையாளர்கள் செலுத்தவும், வாகனங்களை எடுத்துச் செல்லும்போது அதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அதிகாரிகளிடம் காண்பிக்கவும், வழக்கு விசாரணை முடியும்வரை வாகனங்களை யாருக்கும் விற்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com