பாரதத்தில் பிறந்த அனைவரும் தங்களது பெற்றோரை இறுதிவரை பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என இல. கணேசன் எம்.பி. பேசினார்.
விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவில் அவர் மேலும் பேசியது:
சுவாமி விவேகானந்தர் அப்பழுக்கற்ற தேசபக்தர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆடம்பரத்தின் சொகுசை அனுபவிக்காமல் பாரதத்தில் பலர் தெருக்களில் உறங்குகிறார்களே என்று எண்ணி கண்ணீர் வடித்தவர். இந்தியா வந்தபோது, இளைஞர்கள் 50 ஆண்டுகளுக்கு ஏனைய தெய்வங்களை ஒதுக்கி வைத்து விட்டு பாரதத் தாயை மட்டுமே வழிபட வேண்டும் என்றார். விவேகானந்தரைப்போல எந்தத் துறவியும் தேசப்பற்றோடு இதைக் கூறியது இல்லை.
அதனால்தான் அவர் தேசபக்த துறவி என்று அழைக்கப்பட்டார். சுவாமி விவேகானந்தர் பார்ப்பதற்கோ, படிப்பதற்கோ மட்டும் அல்ல. அவரைப் போலவே மாணவர்கள் தேசப்பக்தியில் உறுதி பூண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
சுவாமி கமலாத்மானந்தர்: விவேகானந்தரின் சிகாகோ பயணத்துக்குப் பிறகே இந்திய அரசியல், கல்வி, பொருளாதாரம், வரலாறு ஆகியவை மறுமலர்ச்சி அடைந்தது. விவேகானந்தரின் வெற்றி அவரது ஆன்மிக பலத்தால் ஏற்பட்டது. துறவிகள் பலர் இருந்தாலும் வீரத்துறவி என்று அழைக்கப்படுபவர் விவேகானந்தர் மட்டுமே. அவரை உதாரணமாகக் கொண்டு மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்றார்.
விழாவில், ராமலிங்கா மில் தலைவர் டிஆர். தினகரன், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் ம. சிவசுப்ரமணியம், தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா. ஸ்ரீநிவாசன் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்கு ரூ.27,500 ரொக்கப் பரிசுகள் மற்றும் கேடயங்களும், போட்டியில் பங்கேற்ற 16,142 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.