மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (58). அப்பகுதியில் நடந்த கொலை வழக்குத் தொடர்பாக தேவதானப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் பாலகிருஷ்ணனுக்கு புற்றுநோய் இருந்தது தெரிந்தது. இதையடுத்து தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் உடல்நிலை மோசமானதை அடுத்து ஜூன் 3-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் அளித்தப் புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.