வீடு புகுந்து கவரிங் நகைகளைத் திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
மதுரை காதக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (67). இவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்து ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளி விளக்கு மற்றும் கவரிங் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து முத்து கோ.புதூர் போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அழகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் ஒருவர் சந்தேகத்திற்கு உரிய வகையில் பதுங்கி இருந்ததை அப்பகுதியினர் பார்த்தனர்.
பின்னர் அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் முத்துவின் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஒத்தக்கடை திருவாதவூர் பகுதியைச் சேர்ந்த டேனியல் ஜோசப் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து பொருள்களை மீட்டனர்.