மதுரையில் ஜவுளிக்கடையில் துணிக்கு பணம் தர மறுத்து உரிமையாளர் உள்பட மூவரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மகபூப்பாளையம் கல்லறைத் தெருவைச் சேர்ந்தவர் ஜாபர் உசேன் (34). இவர் செல்லூர் 50 அடி சாலையில் ஆயத்த ஆடையகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு சனிக்கிழமை மாலை வந்த இளைஞர் ஒருவர் ரூ.2,300-க்கு ஆடைகள் எடுத்து விட்டு பணம் தராமல் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது ஜாபர் உசேன், பக்கத்து கடைக்காரர்களின் உதவியோடு அவரைப் பிடித்து துணிகளை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார். இந்நிலையில் இரவில் சிலருடன் வந்த அந்த இளைஞர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் கடை உரிமையாளர் ஜாபர் உசேன் (34), சாதிக், ஜாகிர் உசேன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் (23), சிவபாலன் (26) ஆகிய இருவரையும் கைது செய்து, தலைமறைவான நீதி மற்றும் சூர்யா ஆகிய இருவரைத் தேடி வருகின்றனர்.