மதுரை மற்றும் மேலூரில் தமிழக கோயில்களில் சிறப்புத் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத்துணைத் தலைவர் சுரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
பெத்தானியாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொதுச் செயலர் அழகர்சாமி பங்கேற்றார். கோ.புதூர் பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் தங்கம் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலூர்: மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மேலூர் ஒன்றியத் தலைவர் ஏ.செந்தில்மூர்த்தி தலைமை வகித்தார்.
மாநில பிரசார அணி துணைத்தலைவர் ஏ.ரேணுகாதேவி சிறப்புரையாற்றினார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் கே.ராமமூர்த்தி, சிங்கம்புணரி ஒன்றியத் தலைவர் த.குகன் மற்றும் பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். குருஜி வரவேற்றார். மணி நன்றிகூறினார்.