காவல் துறையினர் அடித்துத் துன்புறுத்தியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செ.மலைச்சாமி. தல்லாகுளம் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு புலிப்படை அமைப்பினருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவர், தன்னை போலீஸார் துன்புறுத்துவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் மனு அளித்தார்.
அதன் விவரம்: கடந்த ஜூலை 18 -ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் எங்களது வீட்டிற்கு வந்த ஒத்தக்கடை காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் என்னையும், எனது சகோதரர்கள் மூவரையும் அழைத்துச் சென்றனர். எனது சகோதாரர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் கூறி அழைத்துச் சென்று துன்புறுத்தினர். நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியும் போலீஸார் கேட்கவில்லை.
ஆகவே, துன்புறுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.