நடிகர் கமல்ஹாசன் யாரோ ஒருவரது தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
இதுதொடர்பாக மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கமல்ஹாசன் போதிய ஆதாரங்களுடன் தமிழக அரசை விமரிசிக்க வேண்டும். 1972-இல் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இப்போது தான் ஊழல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன் எனக்கூறும் அவர் இத்தனை நாளாக தமிழக அரசை ஏன் குறை கூறவில்லை.
அவசர நிலை பிரகடனம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை கலவரம், ஈழத்தமிழர் பிரச்னை, வறட்சியால் விவசாயிகள் பாதித்தது, 2ஜி ஊழல் நடந்தபோது எல்லாம் அமைதியாக இருந்த கமல் இப்போது திடீரென குறை கூறுவது நியாயமானதல்ல. நடிகர் கமலஹாசன் யாரோ ஒருவரது தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார். திடீரென ஊழல் குறித்து பேசுவதன் மூலம், வரக்கூடிய தேர்தலில் யாருக்கோ விலை போய்விட்டார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என்றார்.
கட்சியின் மதுரை மாவட்டச் செயலர் பன்னீர் செல்வம், நகர் மாவட்டச் செயலர் தெய்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.