மதுரை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசப்பன்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி(38). அப்பகுதியில் மது விற்பதில் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் ஒருவரை குத்திக் கொலை செய்ய முயன்றதாக கருப்பசாமியை ராஜதானி போலீஸார் கைது செய்து ஜூலை 20-இல் மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே மதுப்பழக்கத்துக்கு ஆளாகி இருந்த கருப்பசாமிக்கு மத்தியச் சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரி தர்மராஜ் அளித்தப் புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருப்பசாமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, கைது செய்யும் போது நல்ல நிலையில் இருந்த கருப்பசாமி சிறைக்கு வந்தவுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. கருப்பசாமியின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.
சிறைக்கூடுதல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, கருப்பசாமியை ஜூலை 20-ஆம் தேதி இரவு சிறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அவர் ஏற்கெனவே மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலக்குறைவுடன் இருந்துள்ளார். சிறை மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சைப்பலனின்றி இறந்துள்ளார். அவரது சாவில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் கருப்பசாமியின் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணையும் நடந்து வருகிறது என்றார்.