ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இரு சக்கர வாகனங்களின் விலை குறைந்துள்ளது என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் துணைத்தலைவர் எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் டிவிஎஸ் எக்ஸ் எல் 100 இரு சக்கர வாகனம் அறிமுகப்படுத்திய 18 மாதங்களில் 10 லட்சம் விற்பனையாகியுள்ளன.
இதற்கான சாதனை கொண்டாட்டம் ஜூலை 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை கொண்டாட்டம் நடைபெறும். இந்த சாதனையை முன்னிட்டு இரண்டு புதிய வண்ணங்களில் எக்ஸ் எல் 100 வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
சரக்கு மற்றும் பொதுச்சேவை வரி(ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்களின் விலை குறைந்துள்ளது. வாகன உற்பத்தியாளர்களுக்கும் பன்முக வரிவிதிப்பு குறைந்துள்ளது. இதனால் கால விரயம் தவிர்க்கப்பட்டுள்ளது.
எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பை தொழில்துறையினர் வரவேற்கின்றனர்.
பிஎஸ் 3 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை மார்ச் 31-ஆம் தேதி முதல் விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சலுகைகள் வழங்கப்பட்டு வாகனங்கள் விற்கப்பட்டன. உற்பத்திக்கூடங்களில் எஞ்சியிருந்த பிஸ் 3 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு பிஎஸ் 4 என்ஜினாக மாற்றப்பட்டுள்ளது. எனவே இதனால் உற்பத்திக்கூடங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை. மாறாக பிஎஸ் 4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் என்றார்.