பேரையூர் அருகே சந்தையூரில் சுற்றுச் சுவரை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதித்தமிழர் பேரவையினர் 120 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பேரையூர் வட்டம் சந்தையூர் இந்திரா காலனியில் இருவேறு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். இதில் ஒரு தரப்பினர் தங்களது தெருவுக்குள் இன்னொரு தரப்பினர் வருவதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள கோயிலுக்குச் சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர்.
இந்த சுவரை அகற்றக் கோரி ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேரவையின் மாநிலத் தலைவர் கு.ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.போராட்டத்தையொட்டி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் போலீஸாரால் மூடப்பட்டன. அதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேரவையின் மாநிலத் தலைவர் கு.ஜக்கையனை கைது செய்வதாகக் கூறி போலீஸார் அழைத்துச் சென்றனர். இதனால் போலீஸாருக்கும், ஆதித்தமிழர் பேரவையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.