மதுரையில் புதிதாக 2 மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரையில் ஆரப்பாளையம்- அருள்தாஸ்புரம் மற்றும் திருமலைராயர் படித்துறை-செல்லூர் ஆகிய பகுதிகளில் வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில் மதுரை- சிவகங்கை சாலையில் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள சந்திப்பில் சுமார் ரூ.35 கோடியில் மேம்பாலம் அமைக்கவும், குருவிக்காரன் சாலை பாலத்தை உயர்மட்டப் பாலமாக மாற்ற ரூ.22 லட்சத்திலும் கருத்துரு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி பொறியாளர் வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை மாநகராட்சி சார்பில் சிவகங்கை சாலை, குருவிக்காரன் சாலையில் மேம்பாலங்கள் அமைக்க கடந்த 2014 ஆம் ஆண்டு கருத்துரு அனுப்பிய நிலையில், தற்போதைய நிதி அடிப்படையில் மீண்டும் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய இரு பாலங்கள் திறப்பின் போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் மாநகராட்சி பொறியாளர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.