மேலூர் நகராட்சி தெற்குப்பட்டி பகுதி தெருக் குழாய்களில் சேறும் சகதியுமாக கலங்கலான குடிநீர் ஞாயிற்றுக்கிழமை வந்ததாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலூர் நகராட்சியில், தெற்குப்பட்டி 25-ஆவது வார்டு பகுதியாகும். இங்குள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து தெருக் குழாய்கள் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் காவிரி கூட்டுக் குடிநீரும் நிரப்பப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீடு மற்றும் தெருக் குழாய்களில் சேறும், சகதியும் கலந்து கலங்கலான குடிநீர் வந்தது. மேல்நிலைத் தொட்டியை சரிவர சுத்தப்படுத்தாததே இதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குடிநீர் வழங்கு குழாயில் எங்கேனும் கழிவுநீர் கலக்கிறதா என நகராட்சி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.