வெளிநாடுகளில் இருந்து மரக்கட்டைகளை இறக்குமதி செய்யும்போது தாவர நோய்த் தடுப்பு சான்றிதழ் பெறத் தேவையில்லை என்ற மத்திய வேளாண்மைத் துறை சார்புச் செயலரின் சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்துள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த செயல்முருகன் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரக்கட்டைகள் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த மரக்கட்டைகளை ரசாயனம் மூலம் சுத்தம் செய்த பின்னரே தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் மரங்கள் சுத்தம் செய்யப்படாமல், தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், கரையான்கள், மர வண்டுகள், பூச்சிகள் ஆகியவை நம் நாட்டுக்கு வந்து ஆபத்து விளைவிக்கும் அபாயம் உள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டின் மத்திய அரசின் விதிப்படி, எந்த ஒரு மரத்தையும் தாவர நோய்த் தடுப்பு அதிகாரியின் சான்றிதழ் பெறாமல் இறக்குமதி செய்யக்கூடாது.
இதனிடையே, உரிய அதிகாரியின் சான்று இல்லாமலும் இறக்குமதி செய்யலாம் என மே 5-இல் மத்திய விவசாயத் துறை சார்புச் செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் உணவுப் பொருள்களுக்கு மட்டுமே
இவ்வாறு விலக்களிக்கப்படும்.
ஆனால், சிலருக்கு உதவிடும் வகையில் மரக்கட்டைகளை இறக்குமதி செய்யவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த சுற்றறிக்கைக்குத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய விவசாயத்துறை சார்புச் செயலரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.