சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெள்ளிக்கிழமை மதுரை வந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தினருடன் மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் உள்ள நீதிபதிகள் பங்களாவிற்கு வருகைதந்த அவரை நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். காலை 9.30 மணிக்கு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்ற அவரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மற்றும் மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.
கோயிலில் இருந்து 12 மணிக்குப் புறப்பட்ட அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்திற்குச் சென்று ஓய்வெடுத்தார். பின்னர் அங்கிருந்து பகல் 2.40 மணிக்கு கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றார்.