மதுரையில் அனுப்பானடி, பனையூர் கால்வாய்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
அப்போது வைகை ஆற்று ஏ.வி.பாலத்தின் கீழ் பகுதியிலிருந்து அனுப்பானடி மற்றும் பனையூர் கால்வாய்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இப்பணி நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன் முன்னிலையில் நடைபெற்றது. ஆற்று முகத்துவாரத்திலிருந்து ஓபுளாப்படித்துறை பகுதி வரை சுமார் 800 மீட்டருக்கு இரு கால்வாய்களின் இருபுறமும் இருந்த தாற்காலிக மற்றும் நிரந்தர கட்டடங்கள் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
கால்வாய்கள் தலா 13 மீட்டர் அகலத்தில் இருந்த நிலையில், அவற்றில் சுமார் 20 அடி அகலம் வரை கட்டடங்கள் கட்டப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 6 நிரந்தரக் கட்டடங்கள், 28 தாற்காலிக கட்டடங்களில் இருந்த பட்டறைகள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டன.
அனுப்பானடி, பனையூர் கால்வாய்கள் முழுமையாக சீரமைக்கப்பட்ட பின்னர் அவற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், மழைநீர் செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.