கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த பேருந்தில் பயணம் செய்த பயணி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் அந்தோணி (42). இவர் தொழில் நிமித்தமாக மதுரைக்கு அரசுப் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்துள்ளார். பேருந்து மதுரையை நெருங்கிய போது அந்தோணி பேருந்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பேருந்து ஆரப்பாளையத்துக்கு சென்றதும், அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்தோணியை பரிசோதித்த போது அவர் ஏற்கெனவே இறந்து விட்டது தெரிந்தது. பின்னர் அந்தோணியின் சடலத்தை மீட்ட போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேருந்தின் நடத்துநர் சிவக்குமார் (50) அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.