வருமானவரித் துறையினருக்கு வரும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுகிறது, இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.
புதுதில்லியில் இருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய குடியரசுக் கட்சி குஜராத், ஹிமாசலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளது. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. மற்றும் கருப்பு பணம் ஒழிப்பு உள்ளிட்டவைகளில் மத்திய அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதனால் வரும் 2019-இல் மீண்டும் மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், சில நடிகர்களே தனிக்கட்சி தொடங்கி வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்துள்ளனர். வருமானவரித் துறையினருக்கு வரும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றார்.
பின்னர் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க கார் மூலம் திருநெல்வேலிக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.