வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இரட்டைப் பதிவுள்ள மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க நவம்பர் 15 முதல் 30 வரை வீடு வீடாகச் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது.
வரும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் இதற்கான படிவங்களை நவம்பர் 30-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.இதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்கவும், இறந்த, இடமாற்றம் மற்றும் இருமுறை பதிவாகியுள்ள வாக்காளர்களை நீக்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சிறப்பு சரிபார்ப்பு பணி நவம்பர் 15 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேற்குறிப்பிட்ட நாள்களில் வாக்காளர் நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் பெயர்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுவர்.
இவர்களுக்குச் சரியான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.