குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
குடிமைப் பணிகள் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசுத் துறைகள், வங்கிகளில் போட்டித் தேர்வுகள் மூலம் ஆள்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இத்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேக நூலகம் குறைவாகவே இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் 3 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ்.மணிஸ்வர ராஜா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மீண்டும் விண்ணப்பதாரர்களிடமே வழங்கப்படுகிறது.
இதனால் விண்ணப்பங்கள் பராமரிக்கப்பட்ட அறை, நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் குடிமைப் பணி தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான 3 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த நூலகத்தை வியாழக்கிழமை திறந்து வைக்கிறார். அலுவலக வேலை நாள்களில் மாணவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடையாள அட்டையுடன் வரும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்றார்.