சேடபட்டியில் விளைபொருள்களுக்கான குளிர்பதனக் கிட்டங்கி: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம், சேடபட்டி பகுதியில் விளை பொருள்களை பாதுகாக்க குளிர்பதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மதுரை புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேடபட்டி ஒன்றிய மாநாடு, எம்.கல்லுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, சுந்தராம்பாள், சின்னச்சாமி, பொன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த. செல்லக்கண்ணு தொடக்கி வைத்துப் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து, புறநகர் மாவட்டச் செயலர் சி. ராமகிருஷ்ணன் பேசினார். இதில், எம்.கல்லுப்பட்டி-மயிலாடும்பாறை சாலையை சீரமைக்க வேண்டும்.
சேடபட்டி ஒன்றியத்தில் விளையும் விளைபொருள்களை பாதுகாக்க குளிர்பதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும். வைகை அணையிலிருந்து கால்வாய் அமைத்து சேடப்பட்டி ஒன்றிய விளை நிலங்களுக்கு தண்ணீர் விட வேண்டும். எம்.கல்லுப்பட்டி ஊரணியை தூர்வாரி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சேடபட்டி ஒன்றியச் செயலராக என். ஜெயபால் உள்பட 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.