மதுரையில் வணிக வளாக உரிமையாளர் அடித்துக் கொலை: உறவினர்கள் சாலை மறியல்

மதுரை அருகே வணிக வளாக உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை அருகே வணிக வளாக உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     மதுரை ஊமச்சிகுளம் திருமால்புரத்தைச் சேர்ந்த கம்பத்தான் மகன் பிச்சை (55). இவர் தனது வீட்டின் அருகே வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையை குமார் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
     இந்நிலையில், சனிக்கிழமை மாலை குமார் கடையில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அதிசய பிரபு, அருண்குமார், ஆண்டி ஆகிய மூவரும் முன்விரோதம் காரணமாக குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த பிச்சை அவர்களைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், பிச்சையை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் கீழே விழுந்த பிச்சையின் கழுத்தில் காலால் மிதித்துள்ளனர். 
  இந்தத் தாக்குதலில் பிச்சை பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்ததை அடுத்து, மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 
     அதையடுத்து, பிச்சையை அவரது குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவில் பிச்சை உயிரிழந்தார். 
     இச் சம்பவம் தொடர்பாக பிச்சையின் மனைவி வளர்மதி அளித்த புகாரின்பேரில், ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பிச்சென்ற மூவரையும் தேடி வருகின்றனர்.
     இதனிடையே, கொலையாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலாத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில், மறியலை விலக்கிக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com