ஆயுத பூஜை விடுமுறையின்போது மதுரை சரகத்தில் விதிமீறி இயக்கப்பட்ட 309 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறை தினத்தையொட்டி போக்குவரத்துத் துறையின் மதுரை சரகத்துக்கு உள்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்களைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, செப்.28 முதல் அக்.3 ஆம் தேதி வரை வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவசரகால வழி முறையாக இல்லாதது, முதலுதவிப் பெட்டி இல்லாதது, கண்கூசும் வகையில் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண பிரதிபலிக்கும் பட்டை ஒட்டாதது, அளவுக்கு அதிகமாக மேற்கூரையில் சரக்குகள் ஏற்றியது, வாகன அனுமதிக்குப் புறம்பாக வெளி மாநிலப் பேருந்துகள் இயக்கியது, அதிகக் கட்டணம் வசூலித்தது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இத்தகைய விதிமீறல்களுக்காக 309 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டு வரி மற்றும் அபராதத் தொகையாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டது. இதில் 41 பயணிகளிடம் அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.10 ஆயிரத்து 300 திருப்பி அளிக்கப்பட்டது. அனுமதிக்கு மாறாக ஒப்பந்த ஊர்தியைப் போல செயல்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்தியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.