அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணி குடியிருப்புப் பகுதியில் மழை வெள்ளம் புகுந்ததால் கிருதுமால் நதி வாய்க்காலை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிந்தாமணி கண்ணன் காலனியில் 400-க்கும் மேற்பட்ட குயிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கிருதுமால் நதி கால்வாய் உள்ளது. புதன்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக இப்பகுதி முழுவதும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் இப்பகுதியினர் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்தனர்.
மேலும் வீடுகளுக்குள் மழை நீரோடு கழிவுநீர், சகதிகள் சேர்ந்து வந்ததால் வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் மற்றும் உடமைகளும் சேதமாகின.
இதனைக் கண்டித்தும் கிருதுமால் நதி வாய்க்காலை தூர்வாரக்கோரியும் இப்பகுதியனர் 200-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை காலை சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீஸார் பொதுமக்கள் சமாதானப்படுத்தி மறியலை கைவிடச்செய்தனர்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சரவணன் கூறியது: கண்ணன் காலனி அருகே கிருதுமால் நதி வாய்க்கால் உள்ளது. இது பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் வாய்க்காலில் முற்புதர்களும், மண்மேடும் உள்ளது. மேலும் பலர் வாய்காலை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வாய்க்காலில் செல்ல வேண்டிய நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிருத்துமால் நதி வாய்க்காலை சரிசெய்ய வேண்டும் என்றார்.