மதுரையில் புதன்கிழமை இரவு பெய்த மழையின்போது மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரம் கம்பத்தடி மண்டகப்பகுதியில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டது.
மதுரையில் மற்றும் ஊரகப்பகுதிகளில் புதன்கிழமை மாலை திடீரென மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆடி வீதிகளில் மழையின்போது தண்ணீர் தேங்குவது வழக்கம். அந்தத் தண்ணீர் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் மூலம் பொற்றாமரைக்குளத்தில் உடனடியாகச் சென்று சேரும். ஆனால், புதன்கிழமை மழை பெய்தபோது அதிகளவு தண்ணீர் ஆடி வீதியில் தேங்கிய நிலையில், தண்ணீர்செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டதால் கிழக்குப் பகுதி வாயில் வழியாக கம்பத்தடி மண்டபத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தண்ணீர் புகுந்ததை அடுத்து மின் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். புதன்கிழமை பெய்த மழையால் பொற்றாமரைக்குளத்தில் தண்ணீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. மதுரை நகரில் சாலையோரங்களிலும், பள்ளமான இடங்களிலும் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மழை அளவு: மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் (மில்லி மீட்டரில்): மதுரை மாநகர் 16, வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி 15, மேட்டுப்பட்டி 55.4, கள்ளந்திரி 16, மேலூர் 25, தனியாமங்கலம் 5.2, இடையபட்டி 25.2, விரகனூர் 38.
வியாழக்கிழமை இரவு மதுரையில் இடி மின்னலுடன் மழை பெய்தது.