மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியை திருடியதாக, கஞ்சா விற்பனை செய்யும் பெண்ணை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை செல்லூர் சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (70). இவர், தீபாவளிக்கு ஜவுளிகள் எடுத்துவிட்டு, விளக்குத்தூணில் இருந்து ஷேர் ஆட்டோவில் வந்துள்ளார். பாலம் ஸ்டேஷன் சாலையில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது, கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலி திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து மீனாட்சி அளித்த புகாரின்பேரில், செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், செல்லூர் வைகையாற்றுப் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்தத் தகவலின்பேரில், செல்லூர் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராமு மனைவி ராணியை (32) கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், மீனாட்சியின் 7 பவுன் தாலிச் சங்கிலியை ராணி திருடியதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 7 பவுன் சங்கிலி மற்றும் 2 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.