உசிலம்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதைக் கடைகளை காவல் துறை பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வியாழக்கிழமை அகற்றினர்.
உசிலம்பட்டியில் பேருந்து நிலைய நுழைவு வாயில், பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இடங்கள், பேருந்து வெளியேறும் பகுதி, பேரையூர் சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிக அளவில் நடைபாதைக் கடைகளை அமைத்து இருந்தனர். இது குறித்து வருவாய் துறையினருக்கும், நகராட்சி அலுவலகத்துக்கும் புகார்கள் கூறப்பட்டன.
அதன் பேரில் உசிலம்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகராட்சி பொறியாளர் ரத்தினவேலு மற்றும் நெடுஞசாலைத்துறை அதிகாரி முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்துக் கடைகளையும் நகராட்சி துப்பரவு பணியாளர்கள் அகற்றினர். காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், சார்பு- ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் வாசுமுத்து, நவநீதன், பத்மநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.
முடிவில் மீண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் போடப்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றனர்.