திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நாணய சங்கத்தில் பல்வேறு கடன்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இச்சங்க வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூட்டுறவு சங்கத் தலைவர் அ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பக்கீர் மைதீன், குருசாமி, கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன், தனிநபர் கடன் மற்றும் சிறுதொழில் கடன் என ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது. துணைப் பதிவாளர் அமிர்தா கடன்களை வழங்கினார்.
விரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நாணய சங்க வங்கியில் கடந்த 6 மாதத்தில் சுமார் ரூ. 26 லட்சத்துக்கும் அதிகமாக தனிநபர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொழில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், குழு உறுப்பினர்கள் அபுபக்கர், பாண்டி, வைரம், தமிழ்செல்வன், செல்லப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.