திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கோயிலில் கடந்த 20 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. காலை, மாலை வேளைகளில் சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன. 5 ஆம் நாள் விழாவாக வேல் வாங்குதல் விழா நடைபெற்றது. கந்தசஷ்டியின் முக்கிய விழாவான சூரசம்ஹார லீலை புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் விழா நிறைவு நிகழ்வாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இவ்விழாவினையொட்டி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் ரத வீதிகள், கிரிவீதி வழியாக வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் நடைபெற்றது. பின்பு மூலஸ்தானத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக்கவசம் சாற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் ப.கவிதாபிரியதர்சிணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.