சர்வதேசப் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவருக்குப் பாராட்டு
உஸ்பெஸ்கிதானில் சமீபத்தில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் ஒரு தங்கம் உள்ளிட்ட நான்கு பதக்கங்களை வென்ற மதுரை பள்ளி மாணவர் விகாஷுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை லீ சார்ட்லீயர் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் விகாஷ். நீச்சல் வீரரான இவர் சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆசிய அளவிலான சர்வதேசப் போட்டியில் நீச்சலில் பங்கேற்று ஒரு தங்கம் உள்ளிட்ட 4 பதக்கங்களைப் பெற்றார்.
சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்ற விகாஷ் வெள்ளிக்கிழமை மதுரை வந்தார். அவரை விளையாட்டு ஆர்வலர்கள், மதுரை மாவட்ட நீச்சல் கழகத்தினர் உள்ளிட்டோர் வரவேற்றனர். சனிக்கிழமை காலை லீ சார்ட்லீயர் பள்ளிக்கு வந்த மாணவர் விகாஷுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பள்ளியிலிருந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வைத்து ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கின் (ரேஸ்கோர்ஸ்) முன்பு மாவட்ட விளையாட்டு அலுவலர் பொறுப்பு த.ராஜகுமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் லீசார்ட்லீயர் பள்ளி முதல்வர் ரேகா தலைமை வகித்தார். மாநில ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் சோலை எம். ராஜா, நீச்சல் கழக துணத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் த.ராஜகுமார், காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலர் என்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீச்சல் வீரர் விகாஷின் தந்தை பிரபாகர், தாய் ராஜபிரியா ஆகியோருக்கும், பயிற்சியாளர் ஜான்சிக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக விளையாட்டு வீரர்கள் வரிசையாக நின்று விகாஷை கைதட்டி பாராட்டி மைதானத்துக்குள் வரவேற்றனர்.