பிரதமர் நரேந்திரமோடியின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவினர் பல்வேறு இடங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
மதுரை பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் பாஜக மாநிலச் செயலர் இரா.ஸ்ரீநிவாசன் தலைமையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அண்ணா பேருந்து நிலையம், புதூர் பகுதிகளில் தேசியச் செயற்குழு உறுப்பினர் ஹரிசிங் தலைமையில் கட்சியினர் சாலைகளில் இருந்த குப்பைகளை அகற்றினர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்டபொம்மன் சிலை, தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தமிழன்னை சிலை ஆகியவற்றை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது. மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் பகுதி, பெருமாள் கோயில் தெப்பம், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் துப்புரவுப் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சசிராமன் கூறுகையில், பிரதமர் மோடியின் திட்டமான தூய்மை இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலேயே அவரது பிறந்த நாளன்று நகரின் பல்வேறு பகுதியில் கட்சியினர் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். மேலும், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டது என்றார்.
தூய்மைப் பணியில் கட்சி நிர்வாகிகள் கே.கே.சீனிவாசன், து.பாலமுருகன், ஜி.பாரதிராஜா, கார்த்திக்பிரபு, ஹரிகரன், அற்புதராஜா செல்லகுமார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
மகளிரணி: மதுரை முனிச்சாலை பகுதியில் பாஜக மகளிரணி சேவை மையத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமுக்கு மாநில மகளிரணித் தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். அப்போது அவர் ரத்ததானம் வழங்கினார். இதில் 20 பெண்கள் ரத்ததானம் செய்தனர். பின்னர் பெண்கள், சிறுமியர் கையில் மெகந்தியால் தாமரை வரைந்தனர். அதே போல் காமராஜர் சாலை, அலங்கார் திரையரங்கம் பகுதிகளில் மகளிரணியினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தபால் துறை அலுவலர்கள் மூலம் மத்திய அரசின் காப்பீடுத் திட்ட பதிவையும் மகளிரணியினர் மேற்கொண்டனர். இதில் மகளிரணி மாநகர் மாவட்டத் தலைவர் ராதிகா, பேராசிரியர் ரோஜாராணி, மீனா, ஜெயஸ்ரீ மற்றும் ஆஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பூங்கா மற்றும் திருவள்ளுவர் சிலையை பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்தனர்.
இதில் அக்கட்சியின் திருப்பரங்குன்றம் மண்டலத் தலைவர் கே.பி.வேல்முருகன் தலைமையில், மாவட்ட அமைப்பு பொதுச் செயலர் சீனிவாசன், தொகுதி பொறுப்பாளர் ராஜா கண்ணன், வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி: பிரதமர் நரேந்திரமோடியின் 67ஆவது பிறந்தநாளையொட்டி உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவினர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக உசிலம்பட்டி பாஜக மாவட்ட செயலர் தங்கராஜ் தலைமையில் மாவட்டத் தலைவர் மகாசுரேந்திரன் முன்னிலையில் தேனி சாலையில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசு குடியிருப்பு மற்றும் முக்கியவீதிகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் இளைஞரணி மாநில செயலர் மாரிசக்கரவர்த்தி, மாவட்ட மகளிர் அணி தலைவி இளங்கன், ஒன்றியச் செயலர் நீதி மற்றும் நாகராஜ், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.