இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, இயற்கை வேளாண் நிபுணர் பாமயன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள மரம் அமைப்பின் சார்பில், இயற்கை அங்காடி மற்றும் உணவகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். முருகேஷ் திறந்து வைத்தார். இதில், இயற்கை வேளாண் நிபுணர் பாமயன் பேசியதாவது:
நாட்டில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் 3 முதல் 5 லட்சம் விவசாயிகள் இறந்துள்ளனர். உலகின் அனைத்து நாடுகளிலும் விவசாயம் ஒரு வெற்றிகரமான தொழில்முறையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் மட்டும்தான் விவசாயமும், விவசாயிகளும் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர்.
பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடுகள் அதிகரித்த காரணத்தால், தினசரி புதுப்புது நோய்கள் உருவாகின்றன. மருத்துவமனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆரோக்கியமான உணவை உண்ணும் பழக்கத்துக்கு மக்கள் மாறுவது அவசியம்.
இதற்கு, இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.