மதுரை அருகே தவறான நடத்தையை திருத்திக் கொள்ளாததால், மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தையை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள அரும்பனூரைச் சேர்ந்தவர் கோபால்(51). இவரது மகள் சுகன்யா (24). இவருக்கும், மேலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டரை வயதில் குழந்தை உள்ளது.
கணவர் சரவணன் வெளிநாட்டில் இருப்பதால், சுகன்யா தனது குழந்தையுடன் அரும்பனூரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் சுகன்யா விஷம் அருந்தி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டதாக ஒத்தக்கடை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சுகன்யாவின் சடலத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அவரது கழுத்து பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுகன்யா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. உடனே போலீஸார், சுகன்யாவின் தந்தை கோபாலை பிடித்து விசாரணை செய்தனர். அதில், மகள் சுகன்யாவை கொலை செய்ததை கோபால் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீஸார் கோபாலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியது: கோபால் தனது மகள் சுகன்யாவை உறவினர் சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு, சரவணன் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். கோபாலும் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுகன்யா தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றபோது, அங்கு உடன் பணிபுரிபவருடன் தொடர்பு ஏற்பட்டு, சுகன்யா அவருடன் சென்றுவிட்டாராம். அதையடுத்து, குடும்பத்தினர் சுகன்யாவிடம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனாலும், தொடர்பை சுகன்யா கைவிடவில்லை. இந்த விஷயம், வெளிநாட்டில் இருந்த தந்தை கோபாலுக்கு தெரிய வந்துள்ளது.
அதன்பின்னர், மதுரைக்கு வந்த அவர் சுகன்யாவை கண்டித்துள்ளார். ஆனால், சுகன்யா தனது தொடர்பை கைவிடாததால், ஆத்திரமடைந்த கோபால் சுகன்யாவை கொலை செய்துள்ளார் என்றனர்.