திருப்பரங்குன்றம் உதவி வேளாண்மை அலுவலகத்தில், தக்கைப்பூண்டு விதைகள் மானிய விலையில் ரூ.28-க்கு பெற்றுக்கொள்ளலாம் என, திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குநர் சர்புதின் அகமது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: விவசாயிகள் நிலங்களில் தொடர்ந்து ரசாயன உரங்களையே பயன்படுத்துகின்றனர். இதனால், மண்ணில் உள்ள மண்புழு, பூச்சிகள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அழிந்து விடுகின்றன. மேலும், மண்ணில் உள்ள சத்துகள் அழிந்து, விளைச்சல் எதிர்பார்த்த அளவில் கிடைக்காமல் போகிறது.
எனவே, மண்ணின் சத்துகளை நிலை நிறுத்தவும், இயற்கையான பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டை விதைத்து, அது செடியாக வளர்ந்தவுடன் பூக்கும் முன் அதனை மண்ணில் மட்கச் செய்யவேண்டும்.
சம்பா பருவத்தில் நெல் விளைவிப்பதற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்து, மண்ணுக்கு உரமாக்க வேண்டும். இயற்கை உரமான இதனைச் செய்வதால், விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.
ரூ. 55 மதிப்புள்ள தக்கைப்பூண்டு விதைகள், மானிய விலையில் ரூ. 28-க்கு கிடைக்கும். தக்கைப்பூண்டு தேவைப்படுவோர் திருநகர் 2 ஆவது பேருந்து நிறுத்தத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் ஆதார், சிட்டா நகல் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.