அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் உரையாடல் குறித்து கண்டனம் தெரிவித்த மதுரை காமராஜர் பல்கலை. ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க தீர்மானம் நிறைவேற்றியது.
மதுரை காமராஜர் பல்கலை.யில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டமைப்பு கூட்டத்தில், பேராசிரியர்கள் சதாசிவம், முத்தையா, புவனேஸ்வரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவியரிடம் செல்லிடப்பேசியில் பாலியல் பேரம் தொடர்பாக உரையாடியது கண்டிக்கத்தக்கது. மேலும், அந்த உரையாடலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பற்றி குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறைச் செயலர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மேலும், சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். விசாரணையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏப்.17-ஆம் தேதி பல்கலை. வாயில் கூட்டம் நடத்து என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.